சென்னையில் ஸ்மார்ட் பைக்கை உபயோகிப்பது எப்படி?

GUIDE TO SMART BIKES IN CHENNAI

(தி நகரில் உள்ள ஸ்மார்ட் பைக் நிறுத்தம்- படம்:  மகேஷ்.வி)

Translated by Sandhya Raju

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் தகவலின்படி சென்னையில் மட்டும் நாற்பது லட்சம் இரு சக்கர வாகனங்களும், எண்பத்தி எட்டு லட்ச கார்களும் உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை உயர்வால் காற்று மாசு, நெருக்கடி மற்றும் சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளதை மறுக்க முடியாது.

அதிகரித்து வரும் இந்த வாகன எண்ணிக்கை, தனியார் வாகன வசதியை உபயோகிக்கும் நிலையில் இல்லாதவர்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு  பொது போக்குவரத்து பயன்பாட்டை மேம்படுத்தவும், புது வகையான போக்குவரத்து முறைகளை அறிமுகப்படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. நடை பாதை பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுபவர்களை கருத்தில் கொண்டு மோட்டரில்லா வாகனத்திற்கான போக்குவரத்து கொள்கையை சென்னை மாநகராட்சி தயாரித்துள்ளது.

சென்னையில் பைக் பகிர்வு 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பல நகரங்களில் மிதிவண்டி பகிர்வு என்ற முயற்சி பரவலாகி வருகிறது. ஓலாவின் பெடல், யூலு, ஜூம்கார் போன்ற நிறுவனங்கள் டெல்லி, போபால், மைசூர், பெங்களூரு போன்ற நகரங்களில் வெற்றியுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்மார்ட் பைக் என்ற நிறுவனம் மூலம் சென்னையும் இந்த மிதிவண்டி பகிரும் முயற்சியில் தன்னை இணைத்துக்கொண்டது. பிப்ரவரி மாதம் இந்த முயற்சி தொடங்கிய பொழுது ஆறு இடங்களில் இது தொடங்கப்பட்டது. குறைவான கட்டணத்தில், சென்னையின் ஸ்மார்ட் சிடி மிஷினின் ஒரு அங்கமாக தொடங்கப்பட்ட இது படிப்படியாக சூடு பிடிக்க தொடங்கியது.

ஸ்மார்ட் அலைப்பேசியில் பதிவிறக்கம் செய்யக்கூடிய ஸ்மார்ட் பைக் ஷாரிங் சிஸ்டம் என்ற செயலி மூலமாக இது செயல்படக்கூடியது.  இந்த செயலி மூலம் வண்டிகளை உபயோகிக்க முடியும்.  பதிவிறக்கம் செய்யும் பொழுது உபயோகிப்பவரை பற்றிய தகவல்கள், கட்டணம் செலுத்தும் தகவல் ஆகியவற்றை தர வேண்டும்.  கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் கொண்டு கட்டணத்தை செலுத்தலாம்.

அனைத்து விவரங்களையும் பதிவிட்டு கட்டணம் செலுத்தும் தகவல்களும் சரி பார்க்கப்பட்டவுடன், பிரத்யேக கியூ ஆர் கோட் ஒன்றை இந்த செயலி வழங்கும். இதை கொண்டு மிதிவண்டிகளின் பூட்டை விலக்க முடியும். வண்டியை உபயோகிக்கும் நேரத்தில் எங்கேயாவது நிறுத்த வேண்டும் எனில் கைமுறை மூலம் இயங்கும் பூட்டை உபயோகிக்க வேண்டும்.  பயன்படுத்திய பிறகு அதற்கான நிறுத்தத்தில் மீண்டும் நிறுத்திட வேண்டும்.

மிதிவண்டியை குறிப்பிட்ட கால அவகாசம் முறையிலோ அல்லது சந்தா முறையிலோ பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட கால அவகாசம் முறையின் கீழ் முதல் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாயும், அதன் பிறகு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்க்கும் ஒன்பது ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். சந்தா முறை கட்டணம் கீழ் ஒரு நாளுக்கு நற்பத்தி ஒன்பது (49) ரூபாய், ஒரு மாத பயன்பாட்டிற்கு இருநூற்று நாற்பத்தி ஒன்பது(249) ரூபாய் மற்றும் மூன்று மாதத்திற்கு அறநூற்று  தொன்னாற்று ஒன்பது (699)ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். பயன்பாட்டிற்கு பிறகு மிதிவண்டியை அதன் நிறுத்ததிற்கு நேரத்தில் கொண்டு வந்து சேர்க்க தவறினால் அபராத தொகையாக இருநூறு ரூபாய் வசூலிக்கப்படும்.

இது வரை கிடைத்த வரவேற்பு

முதலில் ஆறு இடங்களில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி சில மாதங்களில் நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவடைந்தது. சென்னை பெருமண்டல மா நகராட்சியின் தகவலின் படி தற்பொழுது 370-ஆக வளர்ந்துள்ளது. மிதிவண்டி நிறுத்தம் 37-ஆக உள்ளது. இது வரை 14638 முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 252 பயணம் என்ற அளவில் இது வரை 45407 பயணங்கள் இந்த செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கீழே உள்ள வரைபடம் மூலம் நிறுத்தங்கள் பற்றிய தகவலை அறிந்து கொள்ளலாம்:

[flexiblemap src=”http://data.opencity.in/Data/Chennai-Cycle-sharing-Locations-1.kml” width=”100%” height=”400px” ]

படம்: சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடட்

“மெரினா கடற்கரையோரம் செல்ல இந்த ஸ்மார்ட் பைக்கை நான் உபயோகித்தேன். மிதிவண்டி நல்ல தரமானதாகவும் நல்ல சவாரி அனுபவத்தையும் தந்தது. முதலில் செயலியை உபயோகப்படுத்தவும் அதன் அம்சங்களை குறித்தும் அறிந்து கொள்ள  சிரமப்பட்டேன். கொஞ்சம் பழக வேண்டும்,” என்கிறார் ஆர் ஆகாஷ். இவர் ஒரு மிதிவண்டி பிரியர்.

எல்லோருக்குமானதல்ல

கடந்த சில மாதங்களில் இதன் நெட்வொர்க் வளர்ந்து இருந்தாலும், எல்லாரையும் உள்ளடக்குகிறதா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. ஸ்மார்ட் போன் அல்லது செயலி மூலம் மட்டுமே இதை இயக்க முடியும். இது பொது போக்குவரத்து முறை தேவைப்படும் பல பேருக்கு எட்டாக்கனியாக உள்ளது. இறுதி இடம்  வரை தடையின்றி செல்லக்கூடிய லாஸ்ட்  மைல் கனக்டிவிட்டி என்ற முறையை செயல்படுத்த தடையாக இது அமைகிறது.

“சில மாதங்களாக இந்த மிதிவண்டிகள் இங்கு உள்ளதை பார்க்கிறேன். எங்கள் யாருக்கும் இதை எப்படி உபயோகிப்பது என்று தெரியாது. முதலில் சில தனியார் நிறுவனங்கள் அவர்களின் வேலையாட்களுக்காக வைத்துள்ளனர் என்று நினைத்தேன். என்னிடம் கைபேசி இல்லை, படிக்கவும் தெரியாது அதனால் சிறு தொலைவு செல்லக்கூட இதை உபயோகிக்க முடியாது” என்கிறார் பாண்டி பஜாரில் பூ விற்கும் சீதாலக்ஷ்மி.

செயலியை பயன்படுத்தும் அறிவுரைகள் உள்ளூர் மொழியில் இல்லாததே இதற்கு மற்றுமொரு காரணம். அதே போல் பெரும்பாலானோர் உபயோகிக்கும் UPI, கூகுள் பே, BHIM, பே டி எம் போன்றவை மூலம் கட்டணம் செலுத்த முடியாது என்பதும் ஒரு காரணம்.

ஆங்கில மொழியும் ஸ்மார்ட் போனும் இருந்தால் மட்டுமே உபயோகிக்க முடியும். படம்: மகேஷ்.வி

இது போன்ற ஒரு தேவை நெடுங்காலமாக சென்னையில் தேவைப்பட்டாலும், அனைவரையும் அரவணைத்து உபயோகிக்கும் முறையை அமல் படுத்தவேண்டும். நடைபாதை சாரிகள் அதிகம் உள்ள மெரினா கடற்கரை, தி.நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இது அமைந்ததிருந்தாலும், செயலி மூலம் மட்டுமே உபயோகிக்க முடியும், ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் இந்த பகிர்வு முறையை பல பேர் பயன்படுத்த முடியாமல் உள்ளது. சென்னை நகரை இணைக்கும் ஸ்மார்ட் தீர்வுகளை முன்னெடுக்கும் பொழுது கடைநிலை மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே நிதர்சன உண்மை.

Read the story in English here.

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Aruna Natarajan 183 Articles
Aruna is an Associate Editor at Citizen Matters. She has a BA in Economics and a PG Diploma in Journalism. She has also worked in a think-tank on waste management policy and with a non-profit in sport for development. She writes on civic issues, governance, waste, commute and urban policy. She tweets at @aruna_n29.